18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள், சரியான வேலைப் பயிற்சி மற்றும் ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புகிறார்கள் என்று பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளை (Praja Shakthi Development Foundation) தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இளம் பெண்களில் பெரும்பாலானோர் இந்த நிலையங்களில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாகவே பாலியல் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக அறக்கட்டளையின் நிர்வாகப் பணிப்பாளர் எச்.ஏ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இந்த இளம் பெண்கள் நிலையங்களை விட்டு வெளியேறும்போது, வேலை தேடுவதில் சிரமப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். பயிற்சி அல்லது பாதுகாப்பு இல்லாததால், பலர் பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழியாகப் பாலியல் தொழிலைத் தேர்வு செய்கிறார்கள்.
தற்போது, சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் இந்த அறக்கட்டளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இளம் பெண்களை 18 வயதில் விடுவிப்பதற்குப் பதிலாக, 20 அல்லது 21 வயது வரை நன்னடத்தை மையங்களில் தங்க அனுமதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
மேலும், வெதுப்பக உணவுகள் தயாரித்தல், அழகு கலை மற்றும் NVQ சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பைக் கண்டறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த இளம் பெண்களைப் பாலியல் தொழிலை விட்டு வெளியேற அறக்கட்டளை அழுத்தம் கொடுப்பதில்லை, ஆனால் பாதுகாப்பான, சிறந்த வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் ஆதரிக்கத் தயாராக உள்ளதாக லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

