image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

Share

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிற்குப் பதிலாக உக்ரைனையே அதிக விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். “பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் அடிக்கடி ‘விட்டுக்கொடுப்பு’ (Concessions) என்ற வார்த்தையை உக்ரைனை நோக்கியே பயன்படுத்துகிறார்கள்; ரஷ்யாவிடம் அவர்கள் எதையும் கேட்பதில்லை” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை வரும் ஜூன் மாதத்திற்குள் எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதற்காக உக்ரைன் தனது நிலப்பகுதிகளில் சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், நேட்டோ (NATO) அமைப்பில் சேரும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. உக்ரைனின் கனிம வளம் மிக்க சுரங்க உரிமைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது, உக்ரைன் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்துவிட்டு அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் கைகோர்த்து முடிவுகளை எடுப்பது தங்களுக்குப் பாதகமாக அமையும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். தங்களுக்கு 15 ஆண்டுகாலப் பாதுகாப்பை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள போதிலும், குறைந்தது 20 ஆண்டுகால சட்டபூர்வப் பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைன் கோருகிறது.

தற்போது உக்ரைனின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் ரஷ்யத் தாக்குதலால் சேதமடைந்துள்ள நிலையில், ஒரு கௌரவமான அமைதி ஒப்பந்தத்தை எட்டவே தாம் விரும்புவதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பரிசாக எமது நிலங்களை அவர்களுக்குத் தூக்கிக் கொடுக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் போரை உடனே நிறுத்த விரும்பினாலும், அது ரஷ்யாவிற்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...