வெனிசுவேலாவில் கடந்த ஒரு வருட காலமாக நடைமுறையில் இருந்த சமூக வலைத்தளங்களுக்கான தடை தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, அப்போதைய முன்னாள் ஜனாதிபதி சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதாகக் கூறி இந்தத் தடையை அமுல்படுத்தினார்.
குறிப்பாக ஈலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ (X) தளம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் வெனிசுவேலா மக்கள் கடந்த ஒரு வருடமாக VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே சமூக வலைத்தளங்களை அணுகி வந்தனர்.
வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் திடீர் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய நிர்வாக மாற்றங்களின் ஒரு பகுதியாக சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. சர்வதேச சமூகமும் வெனிசுவேலாவின் இந்த ஜனநாயக நகர்வை வரவேற்றுள்ளது.