உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi Kainerugaba), துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சோமாலியாவில் உகாண்டா முன்னெடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஈடாக, துருக்கி தமக்கு 1 பில்லியன் டாலர் தொகையை ‘பாதுகாப்பு ஈவுத்தொகையாக’ (Security Dividend) வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தொகையை வழங்கத் தவறினால், அடுத்த 30 நாட்களில் துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும் இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
துருக்கிக்கு விடுத்துள்ள இந்த நிபந்தனையுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்க துருக்கியின் “மிக அழகான பெண்ணை” தமக்கு மனைவியாக வழங்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். துருக்கி தனது நாட்டை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், உகாண்டா மக்கள் பாதுகாப்பு கருதி துருக்கிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும், அதற்குப் பதிலாக 100 பசுக்களைச் சீதனமாகத் தருவதாகவும் இவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்குத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ள கைனெருகபா, “புனித நிலத்தைப் பாதுகாப்பதற்காக” 1,00,000 உகாண்டா வீரர்களைத் தனது தலைமையின் கீழ் இஸ்ரேலுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், உகாண்டா படைகள் இஸ்ரேலிய தரப்புடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தீவிரமான கருத்துக்கள் உகாண்டாவின் அதிகாரப்பூர்வ வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
48 வயதான முஹூசி கைனெருகபா, தனது தந்தையின் அரசியல் வாரிசாகக் கருதப்படுகிறார். இருப்பினும், அண்டை நாடான கென்யாவைக் கைப்பற்றுவோம் என்று முன்பு அவர் விடுத்த மிரட்டலுக்காக அதிபர் முசேவேனி பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தமை நினைவு கூரத்தக்கது. தற்போது துருக்கி மற்றும் இஸ்ரேல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவுகள் பல நாடுகளுடனான உகாண்டாவின் நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.