வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள்.., தவெக தலைவர் விஜய் மரியாதை
ஜனவரி 03, 2025ஆம் திகதியான இன்று சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட, வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் வேலு நாச்சியார் சிறந்து விளங்கியவர்.
மேலும், ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய வீரமங்கை, தனது கற்றல்-ஆக்ரோஷத்தால் இன்றளவும் வீரம்-கல்வி நிறைந்த மங்கையாகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொள்கையில், வீரமங்கை வேலுநாச்சியாரும் முக்கிய இடத்தை பெற்றிருந்தார்.
அவரை அரசியல் வழிகாட்டியாகவும் தவெக ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.