ஈரானில் மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், இருப்பினும் அதற்கு முன்னதாகவே இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ‘HRANA’ மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் பிணவறையில் குறைந்தது 180 உடல்கள் வெள்ளைத்துணிகளால் மூடப்பட்டிருப்பதை பிபிசி (BBC) செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
போராட்ட விபரங்கள் சர்வதேச சமூகத்திற்குத் தெரிவதைத் தடுக்க, கடந்த வியாழக்கிழமை முதல் ஈரானில் இணையச் சேவை முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே நாம் ஏதேனும் ஒரு நடவடிக்கையை (இராணுவத் தாக்குதல்) எடுக்க வேண்டியிருக்கும். ஈரானியப் படைகள் மக்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தால், நாங்களும் பதில் தாக்குதலைத் தொடங்குவோம்.”
தற்போது ஈரான் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்துவதா அல்லது அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் மேலதிக பொருளாதாரத் தடைகளை (Sanctions) விதிப்பதா என்பது குறித்து ட்ரம்ப் தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஈரானிய அதிகாரிகளின் இணையத்தடை காரணமாக அங்குள்ள உண்மை நிலவரங்களைச் சேகரிப்பதில் சர்வதேச ஊடகங்களுக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.