உக்ரைன் – ரஷ்ய போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் சங்கிலி பாதிப்பு மற்றும் எல்லை தாண்டிய எரிபொருள் கொள்வனவு அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய நாடான சுலோவீனியா (Slovenia) எரிபொருள் விநியோகத்தில் தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து மக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வருகை தருவதைத் தடுக்கவும், உள்நாட்டு இருப்பைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, தனிப்பட்ட வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 லீற்றர் வரை எரிபொருள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹங்கேரிய எண்ணெய் நிறுவனமான ‘MOL’, தனிநபர்களுக்கு 30 லீற்றர் என்ற மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், எரிபொருள் நிலையங்களுக்குத் தடையின்றி எரிபொருளைக் கொண்டு சேர்ப்பதற்கும் இராணுவத்தின் எரிபொருள் தாங்கிகளை (Tankers) பயன்படுத்துமாறு பிரதமர் ரொபர்ட் கோலோப் (Robert Golob) உத்தரவிட்டுள்ளார். சுலோவீனியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நிறுவனமான ‘Petrol’ கடுமையான தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனச் சுலோவீனிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் பதுக்கலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்நாட்டு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Keywords:
Short Heading for Permalink:

