பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தினால் (PTA) ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஏலத்தில், ஜாஸ் (Jazz), ஸாங்க் (Zong) மற்றும் யூஃபோன் (Ufone) ஆகிய நாட்டின் முன்னணி மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றன. மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இந்த ஏலத்தின் இறுதியில், மொத்தம் 480 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை 50.7 கோடி அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் முடிவுகளின்படி, ஜாஸ் நிறுவனம் 190 மெகாஹெர்ட்ஸ், யூஃபோன் 180 மெகாஹெர்ட்ஸ் மற்றும் ஸாங்க் 110 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளைக் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக 2600 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 3500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை பேண்டுகளுக்கு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த ஏலமானது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வேகப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிளாக்செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று பாகிஸ்தான் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஷாஸா ஃபத்திமா கவாஜா, இந்த 5ஜி அறிமுகமானது நாட்டின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார். இது புதிய தலைமுறை இணைய சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் மற்றும் வேகத்தையும் கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார். பாகிஸ்தானின் டிஜிட்டல் கட்டமைப்பை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதில் இந்த ஏலம் பெரும் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய இந்தப் பயணம், தொலைத்தொடர்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஏலத்தின் மூலம் கிடைத்த இந்த வருவாயானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்ப்பதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. முறையான கேள்வி கோரல் மற்றும் வெளிப்படையான ஏல நடைமுறைகள் மூலம் இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

