ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

28 7

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சித்து தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்தப் போர் தேவையற்றது என்றும், தனது மனசாட்சிக்கு விரோதமாக இதில் பங்கெடுக்க முடியாது என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கிய ஜோ கென்ட், ஈரான் அமெரிக்காவிற்கு எந்தவொரு உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் (Lobby groups) அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் குறித்து ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறைக்குள் பல்வேறு அதிருப்திகள் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் ஜோ கென்ட்டின் இந்த இராஜினாமா பார்க்கப்படுகிறது.

முக்கியமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் போரின் நியாயத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பி பதவி விலகியிருப்பது, அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இராஜினாமா குறித்து வெள்ளை மாளிகை இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Exit mobile version