சர்வதேச அரங்கில் இலங்கையை கண்ணியத்துடனும், பெருமையுடனும் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு அனுதி குணசேகரவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இந்தியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கையின் அனுதி குணசேகரவும் இந்தப்போட்டியில் பங்கேற்றார்.
எனினும், அவர், பல்ஊடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான நிலையில் இருந்தபோதும், காலிறுதிக்கான தகுதிப்பெற்ற 40 பேரில் அவர் தெரிவாகவில்லை.
இந்தநிலையில், பிரதமர் ஹரினி அமரசூரிய, அனுதி குணசேகர தொடர்பில் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,
“2025 உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர இந்த அளவு முன்னேறியமை இலங்கையர் என்ற வகையில் எமக்குப் பெருமை தருகின்றது.
அவரது பங்கேற்பு இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வசிக்கும் ரசிகர்களின் கவனத்தை எமது தாய் நாட்டின் மீது ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது.
அனுதி, உங்களது எதிர்காலப் பயணத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள்! சர்வதேச அரங்கில் கௌரவமும் அபிமானமும் மிக்க வகையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.