அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை மாலை ஆரம்பமாகவிருந்த நிலையில், அவை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி பெரிய பள்ளிவாசலில் மூன்று நாட்களுக்குப் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், எதிர்பார்க்கப்படும் வரலாறு காணாத மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான மொஹ்சன் மஹ்மூதி இது குறித்துத் தெரிவிக்கையில், “மில்லியன் கணக்கான மக்கள் இந்த இறுதிப் பயணத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதால், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்கான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையடையும் வரை இறுதிச் சடங்குகள் ஒத்திவைக்கப்படுகின்றன,” என்றார். தற்போது ஈரானில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாள்வது பாதுகாப்புத் தரப்பினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
டெஹ்ரானில் நடைபெறும் பிரியாவிடை நிகழ்வுகளுக்குப் பிறகு, கமேனியின் உடல் அவரது பிறந்த இடமான ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்திற்கு (Mashhad) கொண்டு செல்லப்படவுள்ளது. அங்குள்ள புனிதமான இமாம் ரேசா நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். கமேனியின் மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் அவருடன் அதே தினத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்குகள் நடைபெறும் புதிய திகதி மற்றும் நேரம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஈரானிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும், நிலைமை சீரானவுடன் புதிய கால அட்டவணை அறிவிக்கப்படும் என அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானின் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உயர்மட்டக் குழுவின் ஆலோசனைகள் ரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

