ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், ஜோர்தான் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல ஏவுகணைகளை தமது இராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக ஜோர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மிகமோசமான பதற்றமான சூழலில், தமது நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜோர்தான் ஆயுதப் படைகளின் பொதுத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தமது வான்பரப்பில் அடையாளம் காணப்பட்ட பறக்கும் பொருட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்தவொரு தலையீடும் அனுமதிக்கப்பட மாட்டாது என ஜோர்தான் வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது விழுந்த ஏவுகணை சிதிலங்களால் குடியிருப்புகள் எதற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இதேவேளை, வான்பரப்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை கருத்திற்கொண்டு, ஜோர்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் சிவில் விமான சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் குறித்து சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளதோடு, பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன.