ஜப்பானில் நேற்று (08) நடைபெற்ற நாடாளுமன்றக் கீழவைக்கான தேர்தலில், பிரதமர் சனா டகாயிச்சி தலைமையிலான லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியுள்ளன. ஜப்பான் வரலாற்றிலேயே முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா டகாயிச்சி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இந்தத் தேர்தலை முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றக் கீழவையில் உள்ள மொத்தம் 465 இடங்களில், ஆளும் கூட்டணி 352 இடங்களைக் கைப்பற்றி ‘சூப்பர் மெஜாரிட்டி’ (Supermajority) எனப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
LDP-யின் தனிப்பெரும் வெற்றி: ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மாத்திரம் தனியாக 316 இடங்களை வென்றுள்ளது. இது ஆட்சியமைப்பதற்குத் தேவையான 233 இடங்களை விட மிக அதிகமாகும்.
LDP-யுடன் இணைந்து போட்டியிட்ட ஜப்பான் புத்தாக்கக் கட்சி (Japan Innovation Party – Ishin) மற்றும் இதர தோழமைக் கட்சிகள் எஞ்சிய இடங்களைப் பகிர்ந்து கொண்டன. பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெறும் 113 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த வெற்றியின் ஊடாக, ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் (House of Councillors) ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், கீழவையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி முக்கியமான சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் சனா டகாயிச்சிக்குக் கிடைத்துள்ளது.
தனது வெற்றியைத் தொடர்ந்து உரையாற்றிய 64 வயதான பிரதமர் சனா டகாயிச்சி, “ஜப்பானைப் பலமான மற்றும் வளமான நாடாக மாற்றுவதற்கான கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்” எனத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான கொள்கைகளுக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு பலமான அச்சாணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.