வெள்ள நிவாரணக் கொடுப்பனவு ரூ. 25,000: யாழ்ப்பாணத்தில் ஊழலுக்கு இடமில்லை – அரசாங்க அதிபர் பிரதீபன் உறுதி!

MediaFile 9

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற ரூ. 25,000 கொடுப்பனவு விநியோகத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் (Government Agent – GA) மருதலிங்கம் பிரதீபன் நேற்று (டிசம்பர் 5) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது உறுதியளித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 365.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடமிருந்து டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குக் கிடைக்கப்பெற்ற கடிதத்தின்படி, முன்னர் இருந்ததை விடக் கொடுப்பனவுக்கான தகுதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன:

முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்குச் சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவில் ஊழல் அல்லது குளறுபடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற தகுதியான பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ. 25,000 பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களின் விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் எப்போதும் ஏற்படாது,” என அரசாங்க அதிபர் பிரதீபன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சரியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர், மேலதிகமாக நிதி ஒதுக்கீடு எஞ்சியிருந்தால், அந்த நிதியானது மீண்டும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version