ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000-ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் வெடித்துள்ள இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை ஈரான் நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில் உள்ள பல வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரான் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். இது போராட்டக்காரர்களைக் கலைப்பதை விட, அவர்களைக் கொல்லும் நோக்கிலேயே பாதுகாப்புப் படையினர் செயற்பட்டதைக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஈரானில் இணையச் சேவைகள் (ஸ்டார்லிங்க் உட்பட) முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த உயிரிழப்பு எண்ணிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவசர விசாரணை நடத்த வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.