கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்

27 6

கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த்(Anita Anand) பதவியேற்றுள்ளார்.

கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார்.

புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதில் மொத்தம் 28 அமைச்சர்கள், 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர்.

இதில் 24 பேர் புதியவர்களாக இணைந்த நிலையில், இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் இடம்பெற்றுள்ளார்.

அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கின்றேன்.

பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும், பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை தமிழகத்தை சேர்ந்தவர். தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர்.

இவரின் பெற்றோர் மருத்துவர்கள் ஆவார்கள்.

58 வயதான அனிதா ஆனந்த் 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.

அனிதா ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தோடு, அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின் கோவிட் பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார்.

Exit mobile version