டுபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21), இந்திய விமானப்படையின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் (Tejas) போர் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
நவம்பர் 17ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த டுபாய் விமானக் கண்காட்சியின்போது இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய அட்டவணையில் மூன்றாவது சாகசமாகத் தேஜஸ் விமானம் இடம்பெற்றிருந்த நிலையில், அது கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளதுடன், விமானி உயிரிழந்தார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்:
“டுபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.”
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஜஸ் விமானத்தைப் பார்க்கப் பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் கூறப்பட்டது.