மோடியின் பயணம் தவிர வெளிநாட்டு தலைவர்களின் பயணங்களை தாமதிக்கும் அரசாங்கம்
ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் (Narendra Modi) தவிர வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பது உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாடுகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தேர்தல்களில் முழு கவனம் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், மாலைதீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தலுக்கு முன்னர் நேர நெருக்கடி இருப்பதன் காரணமாக அந்த பயணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அவர் தேர்தலுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என்று கூறப்பட்ட போதும், தற்போது அவரின் பயணம் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
இருப்பினும், இன்னும் திகதிகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இதற்கிடையில், ஜூலை 30 அல்லது 31 ஆகிய திகதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இதன்படி, செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17இற்கும் இடைப்பட்ட திகதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.