சுவிட்சர்லாந்தின் பனிச்சறுக்குத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த பயங்கரத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார்.
ஜனவரி 1 அதிகாலை 1:30 மணியளவில் ‘லே கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது திடீரெனத் தீப்பற்றியது. ஷாம்பெயின் போத்தல்களில் பொருத்தப்பட்டிருந்த ‘ஸ்பார்க்லர்’ (Sparkler) பட்டாசுகளே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 115-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்களில் ஒன்பது பேர் பிரான்ஸ் நாட்டவர்கள் என்பதால், பிரான்ஸ் தேசமும் இத்துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக, சுவிட்சர்லாந்து அரசாங்கம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 09) தேசிய அளவிலான நினைவேந்தல் தினமாக அறிவித்துள்ளது. அன்று மதியம் 2:00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலினுடன் (Guy Parmelin) இணைந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்துடன் கொண்டுள்ள ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இந்த வருகை அமையும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.