ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூழலில், நெதர்லாந்தில் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையத்தின் வான் பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்புப் படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் (Eindhoven) விமான நிலையத்தின் வான் பகுதியிலும் சில ஆளில்லா விமானங்கள் பறந்தன.
இதன் காரணமாகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானச் சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் தொடர்ச்சியாகப் பறந்தமையால் அப்பகுதியில் அச்சநிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் இராணுவ அதிகாரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் (Ruben Brekelmans) தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.