அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் (Supreme Court) தீர்மானம் வழங்கவுள்ள நிலையில், பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டியும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் ட்ரம்ப் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிகமாக வரிகளை விதித்தது.
ட்ரம்ப் தனது அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்குத் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்த இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து ட்ரம்ப் தரப்பில் அமெரிக்க அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அவசரம் அவசரமாக மாற்று வழிகளைத் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் வரிவிதிப்பை உயர்நீதிமன்றமும் ரத்து செய்துவிட்டால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஏற்படும். எனவே, முன்கூட்டியே புதிய வரிகளை வகுக்கும் பணிகளில் அமெரிக்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.