ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25% வரி (Tariff) விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதற்குச் சீனா தனது கடும் கண்டனத்தையும் பதிலடியையும் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எடுக்கும். கட்டணப் போர்களிலோ அல்லது வர்த்தகப் போர்களிலோ எவரும் வெற்றியாளர் இல்லை. வற்புறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஒருபோதும் சிக்கல்களைத் தீர்க்காது.
அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான வரி விதிப்பு அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளால் ஈரான் ஏற்கனவே மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் 70% வரை உயர்ந்துள்ளன. ஈரானின் மொத்த இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிந்து வரும் நாணய மதிப்பு மற்றும் அதீத பணவீக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதிய வரி விதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளால் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகச் சீனா விளங்குவதால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நேரடியாகச் சீனாவைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவைத் தொடர்ந்து ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஈரானுடன் அதிக வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.