வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா வலுக்கட்டாயமாகப் பிடித்து, நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றிருப்பது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
இந்த நடவடிக்கை சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்களுக்கு எதிரானது எனச் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்.
அமெரிக்காவின் இந்த அதிரடி இராணுவ நடவடிக்கையை ஒரு “மேலாதிக்கச் செயல்” (Hegemonic act) என்று சீனா வர்ணித்துள்ளது.
“ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்கா அப்பட்டமாகப் படைகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.”
தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் எனவும், எவ்வித நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் சீனா சர்வதேச அரங்கில் தனது அழுத்தத்தைப் பதிவு செய்துள்ளது.