வெளிநாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர்… தேடுதல் 14 நாட்களுக்கு பிறகு நிறுத்தம்
ஸ்பெயின் நாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர் தொடர்பிலான தேடுதல் நடவடிக்கையை நீண்ட 14 நாட்களுக்கு பின்னர் முடித்துக்கொள்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சுற்றுலா சென்ற 19 வயதேயான Jay Slater என்ற இளைஞரே ஒரு தடயமும் இல்லாமல் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாய்கள், ட்ரோன், ஹெலிகொப்டர் மற்றும் டசின் கணக்கான தன்னார்வலர்கள், அத்துடன் மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் நிபுணர்கள் குழு என தேடியதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது மொத்த தேடுதல் நடவடிக்கையையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் Tenerife பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் ஏதேனும் துப்புக் கிடைத்தால் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 பொலிசார் உட்பட தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரும் குழு கடந்த 24 மணி நேரத்தில் கடைசி கட்டத் தேடுதலை முன்னெடுத்துள்ளனர். கடைசியாக Jay Slater காணப்பட்டப் பகுதியில் இருந்து, சுற்றுவட்டாரம் முழுவதுமாக தேடியுள்ளனர்.
தற்போது சிறப்பு குழுவினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும், தினசரி நடவடிக்கைகள் தொடரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, Jay Slater-ன் பெற்றோருக்கும் தற்போதைய தகவல் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 17ம் திகதி உள்ளூர் நேரப்படி பகல் 8 மணிக்கு அப்பகுதி நபர் ஒருவருடன் Jay Slater கடைசியாக காணப்பட்டார் என்றும், அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பதில் தகவலேதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஜெய் மலைப்பகுதியில் தொலைந்து போனால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.