அவுஸ்திரேலியாவின் பாண்டை (Bondi) கடற்கரை பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த அல் அஹமது (43) என்பவருக்கு பாராட்டுக்களும் நிதியுதவியும் குவிந்து வருகின்றன.
பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பயங்கரமான சூழலில், சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, எவ்வித ஆயுதமும் இன்றி சாமர்த்தியமாக பயங்கரவாதியை பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார். இந்த மோதலில் அஹமதுவுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
அஹமதுவின் அசாத்திய துணிச்சலைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகையே வியக்க வைத்தது. அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) மருத்துவமனைக்கு நேரில் சென்று அஹமதுவைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவரை “அவுஸ்திரேலியாவின் ஹீரோ” எனப் புகழ்ந்தார்.
பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக உலகெங்கிலும் உள்ள மக்களால் திரட்டப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 75 கோடி இலங்கை ரூபாய்) சமூக நன்கொடை நிதியை, அவர் மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறே காசோலையாகப் பெற்றுக் கொண்டார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான அஹமதுவின் வீரத்தைப் பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் அஹமது, காயங்களில் இருந்து விரைவாக மீண்டு வர வேண்டும் என அவுஸ்திரேலிய மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.