வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் போல ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினை அமெரிக்கா கைது செய்யுமா என்ற கேள்விக்கு, “அதற்கான அவசியம் இருக்காது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
“ரஷ்ய ஜனாதிபதியைப் பிடிப்பதற்கு அவசியமிருக்காது. புதினுடன் நான் எப்போதும் சிறந்த உறவையே கொண்டுள்ளேன். அவருடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரைத் தீர்ப்பது எளிது என்று தான் நினைத்ததாகவும், ஆனால் அது இன்னும் முடிவுக்கு வராதது தனக்கு ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 31,000 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய வீரர்கள். ரஷ்யப் பொருளாதாரமும் தற்போது மோசமான நிலையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா சமீபத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை போதைப்பொருள் கடத்தல் புகாரில் கைது செய்ததைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, “சர்வாதிகாரிகள் மீது அமெரிக்கா இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர வேண்டும்” என மறைமுகமாகப் புதினைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

