பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு: வர்த்தகர்களுக்கு எதிராக வழங்கு தாக்கல்
தீபாவளி முன்னிட்டு ஹட்டன் நகரில் திடீர் சுற்றிவளைப்பின் போது மக்கள் பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் விற்பனை செய்த மற்றும் சுத்தமற்ற நிலையில் உணவு தயாரித்த பல வர்த்தகர்களுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு நாளாந்தம் ஹட்டன் நகரில் பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் ஹோட்டல்களில் சுத்தமின்றி உணவு பாதுகாப்பற்ற முறையில் உணவு தயார் செய்வதாகவும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் முறைபாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் அம்பகமுவ வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இன்று (04.11.2023) சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் சுமார் 28 பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனை செய்த போது அங்கு பொது மக்கள் பாவணைக்குதவாத பொருட்கள் விற்பனை செய்து வருவதனையும், பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரித்து வருவதனையும், சுகாதாரதிற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்வதனையும் கண்டு பிடிக்கப்பட்டது.
அவ்வாறு விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு ஹட்டன் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பலர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வருகின்ற தீபாவளி தினத்தில் பொது மக்கள் பாதுகாப்பு கருதியே இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்துள்ளதாகவும் இது நுவரெலியா மாவட்டம் முழுவதும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தின் மிக முக்கிய நகரமாக ஹட்டன் நகரம் காணப்படுவதனால் இந்த வேலைத்திட்டத்தினை ஹட்டனிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் கூறியுள்ளார்.