உலகம்
நான் இறந்துகொண்டிருப்பதாக நினைத்தேன்: பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டவிவகாரம் குறித்து பிரான்ஸ் செனேட்டர்
நான் இறந்துகொண்டிருப்பதாக நினைத்தேன்: பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டவிவகாரம் குறித்து பிரான்ஸ் செனேட்டர்
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பானத்தில், அவருக்குத் தெரியாமல் போதைப்பொருளைக் கலந்த பிரெஞ்சு செனேட்டரால், பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் அந்தப் பெண்.
கடந்த செவ்வாய்க்கிழமை, Joel Guerriau (66) என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாட, தனது சக நாடாளுமன்ற உறுப்பினரான Sandrine Josso என்னும் பெண்ணை அழைத்துள்ளார். Joel பத்து ஆண்டுகளாக தனது நண்பர் என்பதால் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் Sandrine.
Sandrine, Joel வீட்டுக்குச் சென்றதும், ஷாம்பெய்ன் அருந்தலாம் என அவரை வற்புறுத்தினாராம் Joel. ஆனால், ஷாம்பெய்னில் வழக்கத்துக்கு மாறாக இனிப்பு அதிகமாக இருந்ததை கவனித்த Sandrineக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஷாம்பெய்ன் அருந்தியதும், Joel தனது வீட்டிலுள்ள விளக்கை பிரகாசமாக எரியச் செய்து சட்டென அணைத்தாராம்.
பிறகு, சமையலறையில் அவர் ஒரு வெள்ளை நிற பாக்கெட்டை மறைத்துவைப்பதையும் கவனித்துள்ளார் Sandrine.
சிறிது நேரத்தில், Sandrineக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்ததுடன், உடல் நடுங்க, தனக்கு ஏதோ போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த Sandrine, உடனடியாக லிப்ட் மூலம் வெளியேற முயற்சிக்க, அப்போதுதான் Joelம் தன்னைப் பின் தொடர்வது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
தான் இறந்துகொண்டிருப்பது போல் உணர்ந்ததாக தெரிவிக்கும் Sandrine, இதயம் படபடக்க, நடுக்கத்துடன் டாக்ஸி ஒன்றை அழைத்து அங்கிருந்து தப்பியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், விளக்கு வெளிச்சம் அதிகமாகி, பின் திடீரென குறைக்கப்பட்டால் அவருக்குக் கொடுக்கப்பட்ட போதைப்பொருளின் தீவிரம் அதிகமாகும் என்றும், அதனால்தான் Joel தனது வீட்டிலுள்ள விளக்கை பிரகாசமாக எரியச் செய்து சட்டென அணைத்தார் என்பதும் Sandrineக்குத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Sandrineஐ வன்புணரும் அல்லது, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் நோக்கில் Joel அவரது பானத்தில் போதைப்பொருளைக் கலந்ததாக, சந்தேகத்தின் பேரில் பொலிசார் அவரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். அவர் கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.