உலகம்
பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்
பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்
பிரித்தானியாவில் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் வழக்கில் அதிரடி திருப்பமாக சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிஸார், 19 வயது ஷான் சேஷாய் படுகொலை வழக்கில் 12 வயதான இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் பொலிஸ் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரு சிறுவர்களும் பொலிஸ் காவலில் உள்ளனர் எனவும், சேஷாய் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த படுகொலை தொடர்பில் தகவல்கள் தெரியவரும் போது பொதுமக்கள், கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவிக்கையில், தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆனால் அவசர சேவை மருத்துவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும், இளைஞர் சேஷாய் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் ஹர்தீப் கவுர் என்பவர் தெரிவிக்கையில், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தனது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.