உலகம்

சில நாட்களில் நீ இறந்துவிடுவாய் என்று கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நடந்த பயங்கரம்

Published

on

சில நாட்களில் நீ இறந்துவிடுவாய் என்று கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நடந்த பயங்கரம்

அழகிய இளம்பெண் ஒருவருக்கு ஜோசியம் பார்த்த பெண் ஒருவர், நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய் என்று கூற, அந்த பெண் அடுத்த நாளே இறந்துவிட்டார்.

அந்த விடயம் பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

பிரேசில் நாட்டவரான பின்டோ (Fernanda Silva Valoz da Cruz Pinto, 27) என்னும் இளம்பெண், Maceió என்னும் இடத்திலுள்ள மால் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அந்த இடம் ஜோசியம் பார்ப்பவர்கள் அதிகம் காணப்படும் ஒரு இடமாம். நடந்து சென்றுகொண்டிருந்த பின்டோவை அழைத்த வயதான ஜோசியம் பார்க்கும் பெண்மணி ஒருவர், அவருக்கு ஜோசியம் பார்ப்பதாகக் கூற, அவரிடம் கையை நீட்டியுள்ளார் பின்டோ.

பின்டோவின் கையைப் பார்த்த அந்த பெண்மணி, நீ இன்னும் சில நாட்கள்தான் வாழ்வாய் என்று கூறியிருக்கிறார். பின்டோ புறப்படும்போது, அந்தப் பெண்மணி ஒரு சாக்லேட்டை அவருக்குக் கொடுக்க, அதை வாங்கிய பின்டோ, பசியாக இருந்ததால் அதை சாப்பிட்டிருக்கிறார்.

சிறிது நேரத்தில், பின்டோவின் கண் பார்வை மங்கி, தலைசுற்றலும் வாந்தியும் ஏற்பட, தன் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார் அவர்.

அந்த உறவினர் பின்டோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அதற்குள் பின்டோவின் மூக்கிலிருந்து இரத்தம் வழியத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்டோ, மறுநாள் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த பின்டோவுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள், பின்டோவின் உடலில் நஞ்சு இருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.

பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் இரண்டு நச்சு ரசாயனங்கள் பின்டோவின் உடலில் இருந்தது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த பெண்மணி கொடுத்த சாக்லேட்டில்தான் அந்த நச்சுப் பொருட்கள் இருந்தனவா என்பதை ஆய்வு முடிவுகளால் உறுதி செய்ய முடியவில்லை.

அத்துடன் பின்டோவுக்கு சாக்லேட் கொடுத்த ஜோசியக்காரப் பெண்மணியையும் கண்டுபிடிக்கமுடியாததால், பின்டோவின் மரணத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கமுடியாமல் பொலிசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version