உலகம்
வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவிருக்கும் பிரித்தானியா

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவிருக்கும் பிரித்தானியா
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையின் சொத்துக்களை பயங்கரவாத அமைப்பின் சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரைவு உத்தரவு அனுமதிக்கும் என்றும் கூறுகின்றனர்.
வாக்னர் கூலிப்படையை வன்முறையை தூண்டும் அழிவுகரமான அமைப்பு என குறிப்பிட்டுள்ள உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன், ரஷ்யாவின் வெறும் ஒரு ராணுவ கருவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் செயற்பாடுகள் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் சுயெல்லா பிரேவர்மேன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் வாக்னர் கூலிப்படை முக்கிய பங்கு வகித்துள்ளது.
அத்துடன் சிரியா, லிபியா, மாலி உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது. வாக்னர் கூலிப்படையினர் மீது உக்ரேனிய குடிமக்களைக் கொல்வது மற்றும் சித்திரவதை செய்தல் உட்பட பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது ஹமாஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அமைப்புகள் போன்று, பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட குழுக்களின் பட்டியலில் வாக்னர் கூலிப்படையும் இணைக்கப்படும்.
இதனால் வாக்னர் கூலிப்படையில் இனி உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமாகும். மீறுபவர்களுக்கு 14 ஆண்டுகள் வரையில் சிறை தனடனை அல்லது 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.