உலகம்

பல நூறு கோடிகள் மதிப்பிலான தங்கத்தை புதைத்து வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

Published

on

பல நூறு கோடிகள் மதிப்பிலான தங்கத்தை புதைத்து வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

சுமார் 200 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பாலைவனத்தில் புதைத்து வைத்துள்ளதாக சிரியா முகாமில் சிக்கியுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயாரான இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளில் உயர் பொறுப்பில் இருந்த இருவரை திருமணம் செய்து கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.

தற்போது சிரியா முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த பெண், 2019ல் கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் உறவினர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கு ஒத்திருப்பதாக கூறுகின்றனர்.

அல் பாக்தாதி கொல்லப்பட்ட பின்னர் உறவினரான முகமது அலி சஜேத் தெரிவிக்கையில், அவரும் மற்ற தலைவர்களும் கொள்ளையடிக்கப்பட்ட பல நூறு கோடிகள் மதிப்புள்ள அமெரிக்க பணத் தாள்கள், தங்கம் மற்றும் வெள்ளியை பாலைவனத்தில் புதைத்ததாக கூறியிருந்தார்.

அவ்வாறு பதுக்கப்பட்ட தொகையில் புதிய அட்டூழியங்களுக்கு நிதி உதவி செய்யப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. தற்போது சிரியா முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்மணியும், தங்கம் புதைக்கப்பட்டுள்ள இடம் தமக்கு தெரியும் எனவும், ஆனால் எவரும் தமது பேச்சை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சென்ற இடமெல்லாம் கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, தங்களிடம் இருந்த தங்கம் மற்றும் பணத்தை பாலைவனத்தில் புதைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவே பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ட்ரூரி நம்புகிறார்.

மேலும், குறித்த பெண் தெரிவிக்கையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கீழ் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியதாலையே தாம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தம்முடன் இருந்த பெண்கள் பொய்யை கூறி விடுதலையானதாகவும் தெரிவித்துள்ளார்.

மிக ஆபத்தான, கொடூர செயல்களை முன்னெடுத்த பல பெண்களும், தங்கள் உண்மை முகத்தை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தை ஏமாற்றி, சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து, ஐந்து வயது யாசிதி அடிமைப் பெண்ணை சங்கிலியால் கட்டி, சுடும் வெயிலில் தாகத்தால் இறக்கச் செய்த ஜேர்மன் பெண்ணுக்கு, முனிச் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version