மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் (Geographe Bay), சீற்றமான கடல் அலைகளுக்கு மத்தியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று, நடுக்கடலில் தத்தளித்த தனது குடும்பத்தையே காப்பாற்றிய 13 வயதுச் சிறுவனின் வீரம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஒரு தாயும் அவரது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளும் ‘பேடில்போர்டிங்’ (Paddleboarding) விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீசிய திடீர் பலத்த காற்றினால், அவர்கள் கரையை விட்டு வெகுதூரம் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
தனது தாய் மற்றும் உடன்பிறப்புகள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த 13 வயது மூத்த மகன், உதவி தேடி கரையை நோக்கித் தனது ‘கயாக்’ படகில் சென்றான். ஆனால், படகில் நீர் புகுந்ததால் துணிச்சலாகக் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினான்:
சுமார் 4 கி.மீ (2 கடல் மைல்) தூரத்தை அவன் தொடர்ச்சியாக நீந்தினான். முதலில் அணிந்திருந்த ‘லைஃப் ஜாக்கெட்’ வேகத்தைத் தடுப்பதாகக் கருதி, அதைக் கழற்றிவிட்டு அடுத்த இரண்டு மணிநேரம் வெறும் கைகளால் நீந்திக் கரையை அடைந்தான்.
மாலை 6 மணியளவில் கரையை அடைந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், உலங்கு வானூர்தி மற்றும் மீட்புப் படகுகள் தேடுதலில் ஈடுபட்டன.
சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு பேடில்போர்டைப் பிடித்துக்கொண்டு தத்தளித்த தாயையும் மற்ற இரு குழந்தைகளையும் இரவு 8:30 மணியளவில் மீட்புப் படையினர் மீட்டனர்.
மீட்புப்படைத் தளபதி பால் பிரெஸ்லாண்ட், அச்சிறுவனின் முயற்சியை “மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது” என்று பாராட்டியுள்ளார். அந்தச் சிறுவனின் அபாரத் துணிச்சல் இல்லையென்றால் ஒரு குடும்பமே கடலில் சமாதியாகியிருக்கும் எனப் பொலிஸார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.