சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் (Epstein Files) ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், அதில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவிற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் எடுத்துள்ளார். ஆண்ட்ரூ தொடர்பான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், இது குறித்து முதல்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ள மன்னர், “சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்” என்ற ரீதியில் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் மன்னராட்சிக்கு எதிராகச் செயல்படும் ‘ரிபப்லிக்’ (Republic) என்ற அமைப்பு, இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சருக்கு எதிராக லண்டன் பொலிஸாரிடம் முறைப்படியான புகாரை அளித்துள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, அரச குடும்பத்தின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆண்ட்ரூவின் செயல்பாடுகள் இருந்ததை மன்னர் சார்ள்ஸ் உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. “இந்த விவகாரம் குறித்து நான் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறேன். உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரவேண்டும்” என மன்னர் குறிப்பிட்டுள்ளமை ஆண்ட்ரூவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், இளவரசர் ஆண்ட்ரூ பிரித்தானியாவின் மிக முக்கியமான ‘அரச ரகசியங்களை’ (State Secrets) ஜெப்ரி எப்ஸ்டீனுக்குக் கசியவிட்டதாகப் புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது வெறும் பாலியல் குற்றச்சாட்டு மட்டுமல்லாது, தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது. எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் நெருக்கம் என்பது வெறும் நட்பையும் தாண்டி, உளவுத்துறை மட்டத்திலான தொடர்புகளைக் கொண்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆண்ட்ரூவிடமிருந்த இராணுவப் பட்டங்கள் மற்றும் கௌரவப் பொறுப்புகளைப் பறித்துள்ள மன்னர் சார்ள்ஸ், தற்போது அவரை சட்ட ரீதியிலான விசாரணைகளுக்கு உட்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளமை, பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. “எந்தவொரு நபரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல” என்பதைத் தனது சொந்தத் தம்பிக்கும் பொருந்தும் வகையில் மன்னர் உணர்த்தியுள்ளார். இந்த முடிவானது பிரித்தானிய மக்கள் மத்தியில் மன்னர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளதாகக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
நீதித் திணைக்களம் வெளியிட்டு வரும் 35 இலட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களில், ஆண்ட்ரூவின் தொடர்புகள் குறித்து மேலதிக ஆதாரங்கள் சிக்கினால், அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அரச மாளிகையின் ரகசியங்கள் மற்றும் எப்ஸ்டீனுடன் அவர் மேற்கொண்ட பயணங்கள் குறித்த விரிவான விசாரணைக்கு லண்டன் மெற்றோபொலிட்டன் பொலிஸார் தயாராகி வருகின்றனர். பிரித்தானிய அரச குடும்பத்தின் எதிர்காலத்தையே இந்த விசாரணைகள் தீர்மானிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.