கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், 10 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமைதியான குடியிருப்புப் பகுதியில் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர், அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து சரமாரியாகச் சுடத் தொடங்கியுள்ளார். இந்தத் திடீர் தாக்குதலால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்ததுடன், மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த கனேடிய ராயல் மவுண்டட் பொலிஸார் (RCMP), துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து கனேடிய புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த விவாதங்களையும் மீண்டும் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவர்களில் புலம்பெயர்ந்தோர் எவராவது உள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.