பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் (Epstein Files) அமெரிக்க நீதித்துறையினால் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் தலாய் லாமாவின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதை அடுத்து, அவரது அலுவலகம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தலாய் லாமா ஒருபோதும் ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்ததோ அல்லது அவருடன் பேசியதோ இல்லை.தலாய் லாமா சார்பாகப் பேசுவதற்கு எப்ஸ்டீனுடன் எவ்விதத் தொடர்பையோ அல்லது சந்திப்பையோ மேற்கொள்ள எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள 3 மில்லியன் பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் ‘Dalai’ என்ற சொல் 169 முறை இடம்பெற்றுள்ளதாகச் சீன ஊடகங்கள் உட்படப் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், இந்த ஆவணங்களை ஆய்வு செய்த வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். எப்ஸ்டீனின் மின்னஞ்சல்களில், அவர் ஒரு நிகழ்விற்குச் செல்ல விரும்புவதாகவும் அங்குக் ‘கௌரவ விருந்தினராக’ தலாய் லாமா வரக்கூடும் என்றும் மூன்றாம் தரப்பினரால் பேசப்பட்டுள்ளது. இது எப்ஸ்டீனின் விருப்பமே தவிர, அங்கு தலாய் லாமா இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.
கொடையாளர்கள் பட்டியல் மற்றும் முகவரி புத்தகங்களில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரு உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் என்ற ரீதியில் நிர்வாக ரீதியான குறிப்புகளில் அவர் பெயர் வந்துள்ளது.
இந்த ஆவணங்கள் எதிலும் எப்ஸ்டீனின் சட்டவிரோத அல்லது ஒழுக்கமற்ற செயல்களில் தலாய் லாமாவுக்குப் பங்கு இருப்பதாக எந்தவொரு நேரடிக் குற்றச்சாட்டோ அல்லது ஆதாரமோ முன்வைக்கப்படவில்லை.
இந்திய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “தலாய் லாமா போன்ற புனிதமான ஒரு ஆன்மீக அமைப்பை இவ்வாறான சர்ச்சைகளுடன் தொடர்புபடுத்தி அதன் நற்பெயரைக் கெடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.