தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது யாழ்ப்பாண மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாத்து, இனவாதமற்ற மற்றும் தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது “கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள எம்மீது நம்பிக்கை வைத்துப் பங்களித்தவர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையைச் சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன்.”
இனவாதத்திற்கு இடமில்லாத, அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும்.
பொருளாதார ரீதியாக அழுத்தங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, இப்போது இருப்பதை விடச் சிறந்த வாழ்க்கை நிலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, அனைவரும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் நிச்சயம் உருவாக்குவோம்.
“இந்தத் தைப்பொங்கல் தினத்தில் நாம் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் பிரியாது ஒன்றுபடுவோம். எமது மக்களுக்காகச் சிறந்த நாட்டை உருவாக்க அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டும்” என ஜனாதிபதி தனது உரையில் அறைகூவல் விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் ஒரு தென்இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் முதன்முறையாகப் பாரிய ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயமும் உரையும் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.