H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் (Laura Ingraham) உடன் அவர் நடத்திய நேர்காணலின் போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா?
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “திறமையானவர்களை நாம் நமது நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
அமெரிக்காவில் ஏராளமான திறமையாளர்கள் இருக்கிறார்களே என்று செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது, “இல்லை. இல்லை. அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே வேலையில்லாமல் இருப்பவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பதற்காக அவர்களை ஏவுகணைகளை உருவாக்கும் பணிக்கு நியமிக்க முடியாது” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவதற்காக ஜார்ஜியாவில் நடத்தப்பட்ட சோதனையின்போது தென் கொரியாவைச் சேர்ந்த மக்கள் பேட்டரிகளை உருவாக்கிக் கொண்டிருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
“பேட்டரிகளை உருவாக்குவது மிகவும் சிக்கலான வேலை. மிகவும் ஆபத்தானதும்கூட. அதிக அளவில் வெடிப்புகள் நிகழும். அவர்கள் 500 – 600 பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் (ஜார்ஜியா) விரும்புகிறார்கள். இதில், எனக்கு உடன்பாடு இல்லை. திறமையானவர்களை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்து, அவரது முந்தைய கடுமையான குடியேற்றக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதாகப் பார்க்கப்படுகிறது.