களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் கொடூரமான படுகொலை தொடர்பான வழக்கில், சுமார் 18 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பிறகு மூன்று பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று (13) தீர்ப்பளித்தது. களுத்துறை மேல் நீதிமன்ற நீதியரசர் தமரா தென்னகோன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கினார்.
குடா வஸ்கடுவ, லிட்டில்டன் வத்த பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் திகதி வஸ்கடுவ பகுதியில் உள்ள ஒரு இறுதிச் சடங்கு வீட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சுரேஷ் குமார, ‘ரலஹாமி’ எனப்படும் சுகத் குமார மற்றும் ‘பீட்டா’ எனப்படும் சமித சிசிர குமார ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் களுத்துறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்ப சாட்சியங்கள் ஆராயப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கிடைத்த போதிய சான்றுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த இந்த இழுபறியான விசாரணையில், அரசு தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதியரசர், பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தீர்ப்பை அறிவிக்கும் போது நீதிமன்றத்தில் ஒரு உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. நீதியரசர் தமரா தென்னகோன், மரண தண்டனைத் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாக நீதிமன்றத்தின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடச் செய்ததுடன், மின்விளக்குகளையும் அணைக்கச் செய்து, அங்கிருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறு பணித்தார். இந்த மரண தண்டனைத் தீர்ப்பின் மூலம் 18 ஆண்டுகளாகத் தங்களுக்குக் கிடைக்காத நீதி இன்று கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

