ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஈரானியத் தூதரகத்திற்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், ஈரானிய தூதுவர் மற்றும் அதிகாரிகளிடம் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், “ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்தன,” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் துயரமான நேரத்தில் இலங்கைத் திருநாடு ஈரான் மக்களுடன் துணை நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அயதுல்லா அலி கமேனியின் பதவிக்காலத்தில், குறிப்பாக எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்தது. உமா ஓயா பல்நோக்குத் திட்டம் போன்ற பாரிய திட்டங்கள் ஈரானின் பங்களிப்புடன் நிறைவு செய்யப்பட்டமை இருதரப்பு உறவின் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கமேனியின் மறைவு குறித்து சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கொழும்பிலுள்ள ஈரானியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் (எண்: 222, பௌத்தாலோக்க மாவத்தை) மார்ச் 04 முதல் 06 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுதாபப் புத்தகம் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் எனத் தூதரகம் அறிவித்துள்ளது. அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் இன்று அங்கு வருகை தந்து தமது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.

