கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அவரிடம் மேலும் சில கூடுதல் விவரங்களைப் பெற வேண்டியுள்ளதால் மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
மார்ச் 10-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாகத் தனக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், விசாரணையைச் சென்னையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த சிபிஐ, தவெக தலைவர் விஜய் எதிர்வரும் மார்ச் 15-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு புதிய சம்மனை அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதி சிபிஐ முன்னிலையில் விஜய் ஆஜராவார் என தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்பொழுது இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மார்ச் 17-ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்மனைப் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, சிபிஐ விசாரணைக்கு நேரில் சென்று உரிய விளக்கம் அளிக்க உள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையைச் சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இரு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கால அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில், இந்த விசாரணை நடவடிக்கைகள் சட்ட ரீதியாக எவ்வாறு நகரப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.