வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து இன்று (அக்டோபர் 21, 2025) உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்டபோது, ஜனநாயக தேசிய முன்னணியின் மேலதிக ஆசனத்தினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் என்பவர் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.
எனினும், இவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில், மாநகர சபையில் போட்டியிட்டதும், அதன் மூலம் பதவியைப் பெற்றதும் சட்ட விதிகளுக்கு மீறிய செயல்பாடு என எதிர்ப்பு எழுந்தது.
இதை எதிர்த்து, மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த நான்கு தவணைகள் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்றைய தினம் (21) நீதிமன்றத்தால் மேற்குறித்த இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.