தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து நாட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் (உள்ளூர் நேரம்) வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. லாகார்லோட்டா விமான நிலையம் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் அமைந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், “வெனிசுலா மற்றும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய ‘டெல்டா ஃபோர்ஸ்’ பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகாலப் போரின் ஒரு பகுதி என்று அமெரிக்கா கூறுகிறது. மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதத்தில் (Narco-terrorism) ஈடுபடுவதாகவும், அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
மதுரோ மீது ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என வெளியுறவுத் துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அரசாங்கம் இந்தத் தாக்குதலை ஒரு “ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்பு” என்று வர்ணித்துள்ளதுடன், நாட்டில் அவசர நிலையை (State of Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது. வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோ மற்றும் அவரது மனைவியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தென் அமெரிக்க பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரோவின் தற்போதைய இருப்பிடம் குறித்து அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை.