ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடையச் சில மணிநேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் இராஜதந்திர மத்தியஸ்த முயற்சியால் இந்தத் தற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தத் திடீர் திருப்பம் குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டுவிட்டன; ஈரானிடமிருந்து பெறப்பட்ட 10 அம்ச அமைதித் திட்டம் பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு வார காலப் போர்நிறுத்தமானது நீண்டகால அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான ஒரு கால அவகாசமாகப் பயன்படுத்தப்படும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 19 சதவீதம் வரை சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டத்தில், அமெரிக்கத் தடைகளை நீக்குதல், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் உரிமையை அங்கீகரித்தல் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுதல் போன்ற முக்கிய கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) இதனை உறுதிப்படுத்தியதுடன், போர்நிறுத்தம் நீடிக்கும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பயணிக்கத் தங்களது இராணுவம் அனுமதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குத் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.இந்த உடன்படிக்கையானது வளைகுடா பிராந்தியத்தில் ஒரு பெரிய அளவிலான போர் வெடிக்கும் என்ற அச்சத்தை இப்போதைக்குத் தணித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டுமா என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இரு தரப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன.