ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று (ஏப்ரல் 4, 2026) அறிவித்துள்ளது. மத்திய ஈரான் வான் பகுதியில் இந்த அதிரடிச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 24 மணி நேரத்திற்குள் பாரசீக வளைகுடாவில் உள்ள கெஷ்ம் தீவுப் பகுதியிலும் ஒரு போர் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது F-35 ரக விமானம் அல்ல, மாறாக அது F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) ரக போர் விமானம் எனக் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்த இரண்டு வீரர்களில் ஒருவர் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரைத் தேடும் பணி ஈரானிய வான் எல்லைக்குள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஈரான் தரப்பு அந்த வீரரைப் பிடிப்பதற்காகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகப் பலமுறை கூறி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் அந்த வாதத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட சிதைந்த பாகங்களின் புகைப்படங்களை ஆய்வு செய்த பாதுகாப்பு நிபுணர்கள், அவை F-15E விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். மேலும், அதே நாளில் அமெரிக்காவின் மற்றுமொரு A-10 அட்டாக் விமானமும் ஈரான் தாக்குதலில் சேதமடைந்து குவைத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே நாளில் இரண்டு அமெரிக்க விமானங்கள் இலக்கு வைக்கப்பட்டது போர் முனையில் பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது. ஈரானைத் தாக்க அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வரும் சூழலில், ஈரானின் நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.