அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறவுள்ளன. ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், மறுபுறம் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வருவது சர்வதேச ரீதியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெறுகின்றன. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தலைமையிலான உயர்மட்டக் குழு இதில் பங்கேற்கிறது.
அமெரிக்கத் தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை வழிநடத்துகின்றனர்.
பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் அமைதி வழியிலான அணுசக்தி செறிவூட்டலை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய ஈரான் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அதே வேளையில், மத்திய கிழக்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா தனது வான்வழி மற்றும் கடல்வழி இராணுவப் படைகளைக் குவித்து வருகிறது. “இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும்” என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகளையும் அமெரிக்கா கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பு இருப்பதாகவும், போரோ அல்லது அமைதியற்ற நிலையோ நீடிக்காமல் இருக்க இது உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.