புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய இணையதள முகவரி இடம்பெற்றமை தொடர்பாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) கண்டியில் மல்பத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னரே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், சர்ச்சைக்குரிய இணையதளத்திற்கான அணுகல், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRC) உதவியுடன் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறையான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பாடநூலைப் பரிசோதித்த எந்தவொரு கட்டத்திலும் இந்த இணையதள முகவரி அடையாளம் காணப்படவில்லை என்பது ஒரு பாரிய நிர்வாகக் குறைபாடு என அவர் ஒப்புக்கொண்டார்.
தேசிய கல்வி நிறுவனம் (NIE) வசம் இருந்த பாடநூல் தயாரிப்பு மற்றும் அச்சிடல் பொறுப்பை மீண்டும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் (Educational Publications Department) ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவறைத் தொடர்ந்து அரசாங்கம் சில முக்கிய கொள்கை மாற்றங்களை அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் பாடசாலைப் பாடநூல்களில் இணையதளங்களுக்கான நேரடி இணைப்புகளை (Links) உள்ளடக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான புதிய வழிகாட்டல்கள் மற்றும் கொள்கை வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சந்திப்பின் போது, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 01 முதல் 06 வரை விநியோகிக்கப்படவுள்ள 106 பாடநூல்கள் அடங்கிய தொகுதியினை மகாநாயக்க தேரர்களிடம் பிரதமர் கையளித்தார். எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.