பிரித்தானியாவிற்கு மாணவர் விசா மற்றும் பணியாளர் விசா மூலம் வந்து தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான், கேமரூன், மியன்மார் மற்றும் சூடான் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாணவர் விசா (Student Visa) வழங்குவதை பிரித்தானியா நிறுத்தியுள்ளது. அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திறன்சார் பணியாளர் விசாவும் (Skilled Work Visa) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2025 வரையான காலப்பகுதியில், சுமார் 135,000 பேர் சட்டப்பூர்வ விசாக்கள் மூலம் பிரித்தானியாவிற்குள் நுழைந்த பின்னர் தஞ்சம் கோரியுள்ளனர். இதில் 13 சதவீதமான விண்ணப்பங்கள் மாணவர் விசாவில் வந்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த முறைகேடுகளைத் தடுக்கவே “எமர்ஜென்சி பிரேக்” (Emergency Brake) எனப்படும் இந்த அவசரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தொடர்பான விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், டென்மார்க் நாட்டின் கடுமையான குடிவரவு முறையைப் (Danish Model) பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமான ஒன்றாக இருக்காது. அகதி அந்தஸ்து பெற்ற பெரியவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் குழந்தைகளின் நிலைமை ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் (இரண்டரை ஆண்டுகள்) ஒருமுறை மீளாய்வு செய்யப்படும். ஒரு அகதியின் தாய்நாடு பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இதற்கு முன்னர் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் 5 ஆண்டுகளில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால் புதிய விதிகளின்படி, குடியுரிமை பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், துணையின்றி வரும் சிறுவர்களுக்குத் தொடர்ந்து 5 ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களின் கோரிக்கைகள் பழைய விதிகளின் படியே பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

