யாழ். துணைவேந்தர் தெரிவு சர்ச்சை நீங்கியது; 7 விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டல்!

23 63e7213579bd6

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு, யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான சுற்றறிக்கையின் பிரகாரம் செப்டம்பர் 1ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, இரண்டு விண்ணப்பங்கள் குறித்துச் சந்தேகம் எழுப்பப்பட்டது.

விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளாரா என்பது தொடர்பிலும்.

வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் ஐயப்பாடுகள் எழுந்தன.

இது தொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காகக் கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த ஆணைக்குழு, இருவரது விண்ணப்பங்களும் நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இன்று வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.

Exit mobile version