இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில், சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்தச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த 17 வயதுச் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர் என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.